திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு வள்ளி, தெய்வானை முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். விழாவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லாததால் கோயில் வளாகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது.
திருத்தணி முருகன் கோயிலில், கடந்த மாதம், 31 ம் தேதி ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பரணியும், இன்று திங்கள்கிழமை ஆடிக்கிருத்திகை மற்றும் முதல்நாள் தெப்பல் நடக்கிறது. கரோனா தொற்று காரணமாக ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பல் திருவிழாவிற்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு முருகன் கோயில் இணை ஆணையர் அ.பரஞ்சோதி, கோயில் தக்கார் வே. ஜெயசங்கர் ஆகியோர் முருகப்பெருமானுக்கு புஷ்ப காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் உற்சவ முருகப்பெருமானுக்கு தயிர், பன்னீர் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி சில பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும் முகப்பு வாயிலில் உள்ள முருகப்பெருமானுடைய வேல் முன்பு காவடிகளை வைத்து வழிப்பட்டனர்.
பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லாததால், மலைக்கோயில், திருக்குளம் மற்றும் மலையேறும் படிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பக்தர்கள் மேற்கண்ட இடங்களுக்கு செல்லாதவாறு கோயில் வழிப்பாதைகளில், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயிலில் பக்தர்கள் அனுமதியில்லை என்ற செய்தி தெரியாமல், பெரும்பாலான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசிக்க முடியாமல் கோயிலுக்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர். இன்று மலைக்கோயிலில், 3 ம் பிரகாரத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தெப்பல் உற்சவத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி, 3 முறை குளத்தை வளம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.