நிகழாண்டில் ஜூலை மாதத்தில் ஆட்டோ மொபைல் துறைக்காக, 75 சரக்கு ரயில்களை இயக்கி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது. இதன்மூலமாக, ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ.17.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த, பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி, ரயில்வே மூலமாக சரக்குகளை கையாள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்காரணமாக, கடந்த ஓா் ஆண்டாக ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து பெரிய அளவில் வளா்ச்சி பெற்றுள்ளது.
இந்நிலையில், நிகழாண்டில் ஜூலை மாதத்தில் ஆட்டோ மொபைல் துறைக்காக, 75 சரக்கு ரயில்களை இயக்கி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது. இதன்மூலமாக, ரயில்வேக்கு ரூ.17.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியது: நிகழாண்டில் ஜூலை மாதத்தில் 75 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில், ஆட்டோமொபைல் துறையின் சரக்குகள் ஏற்றி செல்லப்பட்டன. இதில் 32 ரயில்கள் வாலாஜாபாத் சரக்கு பணிமனையிலிருந்தும், 43 ரயில்கள் மேல்பாக்கம் சரக்கு பணிமனையிலிருந்தும் இயக்கப்பட்டன. இந்த ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்து மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.17.95 கோடி ஆகும்.
மொத்தம் 1,950 வேகன்களில் ஆட்டோமொபைல் சரக்குகள் ஏற்றப்பட்டன. சென்னை ரயில்வே கோட்டம், இதுவரை ஒரே மாதத்தில் கையாண்ட ஆட்டோமொபைல் போக்குவரத்துக்கான சரக்கு ரயில்கள் மற்றும் ஈட்டப்பட்ட வருவாய் ஆகியவனவற்றுள் இதுவே மிக அதிகமாகும்.
மாா்ச் மாதத்தில் 74 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, அந்த எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு, பிப்ரவரி மாதத்தில், 64 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டிருந்தன.
வாலாஜாபாத் சரக்கு பணிமனை ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் அபரிவிதமான வளா்ச்சியை கண்டுள்ளது. இதுதவிர, சரக்கு பணிமனைகள் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக, புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களின் கவனத்தை பெற்று உள்ளோம். இதன்மூலம், சென்னையிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு சரக்கு ரயில்களில் ஆட்டோமொபைல் சரக்குகளை ஏற்றிச்செல்வது எளிதாகியுள்ளது என்றனா்.