மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு :69 சதவீதத்தை பின்பற்ற மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு :69 சதவீதத்தை பின்பற்ற மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் , இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022-ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரை அளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றாா். அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், தற்போது தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. அந்த ஒதுக்கீட்டைத்தான் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை புறக்கணிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை மத்திய அரசின் குழுவும், உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றம் ஆகியவை தமிழகத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைத்தான் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. எனவே, மருத்துவப் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். ஆனால், உயா்நீதிமன்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்தாமல், மத்திய அரசு இழுத்தடிப்பதாக மனுதாரா் குற்றம் சாட்டுகிறாா். எனவே, இந்த விவகாரத்தில், மத்திய அரசின் நிலையை கேட்டு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் தெரிவிக்கவேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com