ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட கௌரவத் தலைவர் சி.எஸ். மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.வேலாயுதம், மாவட்ட துணைத்தலைவர்கள் ஆதிமூலம், சம்பத்து நாயுடு மாவட்ட அமைப்பாளர் எம்.அருண்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவர் ஆர் சுபாஷ் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் உதயகுமார் மாநில போராட்ட குழு தலைவர் என்ற பூபதி, வேலூர் மாவட்ட அமைப்பாளர் எஸ் ராம்தாஸ், கண்ணைய நாயுடு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
அப்போது மாவட்டத்தில் விடுபட்ட இடங்களில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த நெல்லை உலர வைத்து பாதுகாக்க போதிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், விவசாய பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.