விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசு: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாக திமுக தலைமையிலான அரசு செயல்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பசிப்பிணி ஒழிப்பை இலக்காக கொண்டு எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. எம்.எஸ். சுவாமிநாதனின் ஆலோசனைகளை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
காலநிலை மாற்றம் குறித்து எம்.எஸ். சுவாமிநாதன் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்துள்ளார். காலநிலை மாற்றம் என்பது மனித இனத்துக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னை. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். வேளாண் துறையில் அறிவியல் தொழில்நுட்பங்களை புகுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயத்துக்கு திமுக தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டுக்கு உயிராகவும் உடலாகவும் உள்ள வேளாண்மை துறைக்கு திமுக தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளிப்பதால்தான், தமிழகத்தில் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி தனி நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.