திருப்பூர்: ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றதைக் கொண்டாடும் வகையில் தாராபுரத்தில் ஹாக்கி மட்டையுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு பேக்கரி உரிமையாளர் ரூ.250 மதிப்புள்ள இனிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த வெற்றியை நாடு முழுவதிலும் உள்ள ஹாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தாராபுரம் பெரியகடை வீதியில் குஜராத் ஸ்வீட்ஸ் என்ற பெயரில் மித்தேஷ் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு ஹாக்கி மட்டையுடன் வரும் வீரர்களுக்கு ரூ.250 மதிப்புள்ள இனிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறார்.
இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் மித்தேஷ் கூறியதாவது:
ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே நாளில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. அதிலும், 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் அணிக்கு பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியா 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வேண்டி இருந்தது. தற்போது காலகட்டத்தில் இளைஞர்கள் பப்ஜி போன்ற விடியோ கேம்களை விளையாடி வருகின்றனர். இவர்களை ஹாக்கி, டென்னிஸ்,வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் எனும் நோக்கத்திற்காகவும் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்திலும் குஜராத் பேக்கரிக்கு ஹாக்கி மட்டையுடன் வரும் அனைவருக்கும் 250 மதிப்பிலான இனிப்புகளை வழங்கி வருகிறோம்.
அதேபோல், ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதையடுத்து, பேக்கரிக்கு சிந்து என்ற பெயரில் வரும் பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு அவர்கள் வாங்கும் பொருள்களுக்கு ரூ.100 தள்ளுபடி கொடுத்து வருகிறோம். கடந்த 60 ஆண்டுகளாக பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது தாத்தா ஒலிம்பிக் போட்டியைப் பற்றி அடிக்கடி கூறி வந்ததால் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்தியா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுதுடன் வீரர்களின் மீது ஒரு மதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.