வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நள்ளிரவு நேரத்தில் மின்சாதன கடையில் புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருள்களை திருடிச் சென்ற சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரைச் சேர்ந்தவர் முகமது ஹனப் (35 ). இவர், இதே பகுதியில் தனது தந்தை திலால் பெயரில் மின்சாதன மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன், பெரியகுளத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இவரது கடையில் வேலை செய்யும் பணியாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் கடையை மூடி விட்டு, தர்காவில் தொழுது விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
இன்று சனிக்கிழமை காலையில் கடையைத் திறந்து பார்த்த போது, கடையின் பின்புற கதவை திறந்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கடையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய மின்சாதன மற்றும் ஹார்டுவேர் சம்பந்தமான ஏறக்குறைய ரூ. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் முகமது ஹனப் வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமையிலான காவலர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டுச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாழப்பாடி அருகே மின்சாதன கடையில், பின்பக்க கதவை திறந்து ரூ 10. லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.