கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவன், தனது இரண்டு கைகளாலும் தலைகீழாக தமிழ்க் கட்டுரைகளை எழுதி சாதனை புரிந்துள்ளார்.
கோவை, செட்டி வீதி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர், சங்கீதா தம்பதியர். இவர்களின் இளைய மகன் பிரித்திவ். பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்களை தலைகீழாக எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில் இவரது அரிய திறமையைக் கண்ட இவரது பெற்றோர், மாணவன் பிரித்திவுக்கு அளித்த பிரத்யேக பயிற்சியால், தனது வலது, இடது என இரு கைகளாலும், தமிழ் எழுத்துக்களை தலை கீழாக வேகமாக எழுதத் துவங்கியுள்ளார். அதாவது ஒரு எழுத்தை வழக்கத்திற்கு மாறாக இறுதியில் இருந்து துவங்கி தொடக்கத்தில் முடிக்கிறார்.
மாணவன் பிரித்திவின் திறமை குறித்து அறிந்த நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகுவின் முயற்சியால் மாணவன் பிரித்திவ் நான்கு பக்கங்கள் கொண்ட தமிழ் கட்டுரையை இரண்டு கைகளாலும், தலை கீழாக எழுதி, நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவரது சாதனையை கண்காணித்த நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் கலை பண்பாட்டு துறையின் தீர்ப்பாளர் அரவிந்த் மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.
மாணவன் பிரித்திவ் ஏழாவது படிக்கும்போதே மரங்களை காப்போம் எனும் தலைப்பில் பென்சில் பெட்டிகளை கொண்டு சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.