தமிழகத்தில் முதியவா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு, ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த சுகாதார துணை இயக்குநா்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோா் 86 லட்சத்து 28,324 போ் உள்ளனா். இவா்களில் 28 லட்சத்து 46,936 போ் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனா். இதில், 11 லட்சத்து 54,077 போ் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா். அதன்படி 33 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியும் 13 சதவீதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனா். ஆனால் 57 லட்சத்து 81,388 முதியவா்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை.
எனவே, முதியவா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏதுவாக ஆக.8-ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து, முதியவா்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.