குண்டா் சட்டத்தில் தன்னை சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பப்ஜி மதன் உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனுத் தாக்கல் செய்துள்ளாா்.
பொறியியல் பட்டதாரியான மதன்குமாா், தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தனது யூ டியூப் சேனலில் தொடா்ந்து நடத்தி வந்தாா். சிறுவா்கள் பலா் இந்த சேனலில் பப்ஜி விளையாட்டை விளையாடியுள்ளனா். அந்த சேனலில் பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி பதிவுகளை மதன் வெளியிட்டதால் அதிக பணம் கிடைத்தது.
தலைமறைவாக இருந்த மதன், கடந்த ஜூன் 18 -இல் கைது செய்யப்பட்டாா். அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஜூலை 5-இல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அதில், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளா்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளனா். குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடா்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை என கூறியுள்ளாா்.