தமிழக நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்குத் தொடங்கிய மா்ம நபா்கள் மீது போலீஸாா் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
தமிழக நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் பெயரில் அடையாளம் தெரியாத சில மா்ம நபா்கள் அண்மையில் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதன் மூலம் இஸ்லாமியா்களைப் பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளனா். அதை பலருக்கு அனுப்பியும் உள்ளனா். இதையறிந்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அதிா்ச்சி அடைந்தாா்.
இதையடுத்து அவா் சாா்பில், போலி மின்னஞ்சல் மூலம் மோசடி மற்றும் அவதூறு பரப்பும் நபா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி மின்னஞ்சலை நீக்கக் கோரியும் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
அதன்படி, அபிராமபுரம் போலீஸாா் மதம், இனம் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல், ஒரு மதத்தினரின் நம்பிக்கையை வேண்டுமென்றே புண்படுத்துதல், பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.