கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் ஆந்திரத்திலிருந்து தமிழகத்திற்கு உரிய அனுமதியின்றி கொண்டு வந்த 30 கிலோ வெள்ளி, 19 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழு கிணறு பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை காவலர்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு அனுமதியின்றி கொண்டுச் சென்ற 30 கிலோ வெள்ளி, 19 லட்சம் ரூபாய் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடி வழியாக ஆந்திரம், தெலுங்கானா, டெல்லி, ஹரியாணம், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வட மாநிலங்களிலிருந்து இரும்பு உதிரி பாகங்கள் மற்றும் பல்வேறு பொருள்களை ஏற்றிக்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதுண்டு.
இந்நிலையில் எளாவூர் சோதனைச்சாவடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் காவல்துறையினரின் வாகன சோதனையில் கஞ்சா, செம்மரக்கட்டை, அபின், போதை மாத்திரைகள், குட்கா, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
தொடர்ந்து இன்று அதிகாலை ஆரம்பாக்கம் தனிப்பிரிவு காவலர் நாராயணன் தலைமையில் காவலர்கள் மேற்கண்ட ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி காவலர்கள் சோதனை செய்தனர்.
சோதனையில் உரிய அனுமதியின்றி 30 கிலோ வெள்ளி கட்டிகளும், 19 லட்சம் ரூபாய் பணமும் இருந்ததை கண்டு காவலர்கள் அதனை பறிமுதல் செய்தனர்.
பின்பு காவலர்கள் நடத்திய விசாரணையில் காரில் மேற்கண்ட வெள்ளி மற்றும் பணத்தை கொண்டு வந்தது சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண் குமார் (49) என தெரியவந்தது. மேலும் காரில் அவரது கணக்கர் சுந்தர்(43), கார் டிரைவர் விஜய்(30) ஆகியோரும் உடனிருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் பழைய வெள்ளி நகைகளை ஆந்திர மாநிலம் ஓங்கோலுக்கு கொண்டு சென்று அங்கு அதனை உருக்கி கட்டியாக மாற்றி அதனை சேலம் கொண்டு சென்று அங்கு அதனை புதிய வெள்ளி பொருள்களாக மாற்ற இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
மேற்கண்ட பொருட்களுக்கு உரிய ஆவணம் இல்லாத சூழலில் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ வெள்ளி, 19 லட்சம் ரூபாய் பணத்தை ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு, இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.