கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி நண்பரின் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாத முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், செந்தில், நெருங்கிய நண்பர்களான சந்திரசேகர், சந்திர பிரகாஷ் உள்ளிட்ட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை சுகுணாபுரம் வீடு, சகோதரர்கள் அன்பரசன், செந்தில்குமார் வீடுகள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் என அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். கோவையில் மட்டும் 42 இடங்களில் சோதனையானது நடைபெற்றது. 11 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் 13 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் சந்திரபிரகாஷுக்கு சொந்தமான கேசிபி என்ஜினியர்ஸ் நிறுவனத்தின் சென்னை மற்றும் கோவை அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே நெஞ்சுவலி காரணமாக சந்திரபிரகாஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் மூன்று தளங்களில் அமைந்துள்ள கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 12 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். நேற்றைய தினம் இரண்டு தளங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், இன்று மூன்றாவது தளத்தில் இன்றும் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனையை துவங்கியுள்ளனர். அலுவலகங்கள் முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனை புதன்கிழமை மாலை வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.