கூட்டம் கூடுவதாலே கரோனா தொற்று அதிகரிக்கிறது என்றும் கூட்டமான இடத்திற்குச் செல்லும் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,
தமிழகத்தில் இரண்டாவது அலை குறைந்தாலும் சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ச்சியாக 2000-ஐ நெருங்குவது வருத்தமளிக்கிறது.
தமிழகத்தில் 38% பேர் மட்டுமே சரியாக முகக்கவசம் அணிகிறார்கள். அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் சமூக இடைவெளி இல்லை. கூட்டமான இடத்திற்குச் செல்பவர்கள் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தடுப்பூசி போடாமல் கூட்டம் கூடும் இடத்திற்குச் செல்ல வேண்டாம். அப்படி செல்வதால் கரோனா பாதிப்பு அதிகரிக்கும்.
கூட்டம் கூடுவதாலே கரோனா தொற்று அதிகரிக்கிறது. சென்னையில் 300 பேர் கூடிய கூட்டத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். அவருக்கு நீரழிவு நோய் இருந்தது, தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லை.
கரோனா குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை. மக்களிடம் மனமாற்றம் தேவை. கரோனா இல்லை என்ற பூஜ்ஜிய இலக்கை எட்ட மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
சாலையோர கடைகள் 5 -23% பேர் மட்டுமே முகக்கவசம் அணிகிறார்கள். வணிக வளாகங்களில் விதிமுறைகள் சற்று பரவாயில்லை. மக்கள் எச்சரிக்கையுடன் இல்லை என்றால் அரசு, எந்த வசதி செய்தாலும் தொற்று பரவும்.
தடுப்பூசி போடுங்கள் என்று வீதிவீதியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தடுப்பூசி இருக்கும் நேரத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
கரோனாவை பொதுமக்கள் அலட்சியமாக நினைக்க வேண்டாம். அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு போல் கரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் எனவே, தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.