உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம் குறைவாகக் கொடுப்பதாகக் கூறி பணிகளை நிறுத்தி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது உத்தப்பநாயக்கனூர் கிராமம். இந்த கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் பணியாட்களை கொண்டு அந்த பகுதியில் உள்ள ஓடைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 100 நாள் பணியாட்கள் காலை 8 மணிக்கு பணிகளைத் தொடங்குகின்றனர். தொடர்ந்து மாலை 4 மணி வரை ஓடைகள் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. ஆனால், அரசு வழங்கக்கூடிய சம்பளத்திற்கு சரியான முறையில் வேலை செய்வதாகவும் அதற்கு அதிகபட்ச ஊதியமாக 60 முதல் 100 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் 100 நாள் பணியாட்களுக்கு 200 ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டுமென கூறி 100 நாள் பணியாட்கள் இன்று பணிகளை செய்யமால் வரத்து ஓடைகளிலேயே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவமறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட 100 நாள் பணியாட்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி அதிகபட்ச சம்பளமாக ரூ. 150 வழங்கப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் ஓடையை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர் .