மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகளையும் ஆடுகள் விற்க வந்தவர்களையும் போலீசார் விரட்டியடித்தனர்.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த பொது முடக்கத்தின்போது மானாமதுரையில் வாரச்சந்தை நடைபெறவில்லை.
அதன்பின் தொற்று பரவல் குறைந்ததையடுத்து மானாமதுரையில் வாரச்சந்தை நடத்த அனுமதிக்கப்பட்டது.
வைகை ஆற்றுப் பகுதி, ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிர்புறம், பாகபத் அக்ரஹாரம், சிவகங்கை ரோடு, தாயமங்கலம் ரோடு ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
பேரூராட்சி அலுவலகம் எதிரே வழக்கமாக அதிகாலையில் ஆட்டுச்சந்தை நடைபெறும். கடந்த வாரம் வரை இதே பகுதியில் ஆட்டுச்சந்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை வைகை ஆற்றுக்குள் வியாபாரிகள் கடை அமைக்க முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, மானாமதுரையில் வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்படுவதாக பேரூராட்சி நிர்வாகம் மூலம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மானாமதுரையில் வாரச்சந்தை தினமான வியாழக்கிழமை காலை பேரூராட்சி அலுவலகம் முன்பு வழக்கம்போல் ஆடு விற்கவும், வாங்கவும் ஏராளமானோர் கூடினர்.
தடையை மீறி கூட்டம் கூடியதால் அங்கு வந்த போலீசார் ஆடு விற்க வந்தவர்களையும், வாங்க வந்தவர்களையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இதனால் ஆட்டுச் சந்தையில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
பின்னர், ஆட்டு வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் வகையாற்றுப் பகுதிக்குச் சென்று ஆடு விற்பனையில் ஈடுபட்டனர்.
பின்னர் வியாபாரிகள் ஆற்றுக்குள் கடைகள் அமைக்க முடியாதபடி ஆனந்தவல்லி அம்மன் கோயில், சோணையா கோயில் ஆகிய இடங்களில் வைகை ஆற்றுற்றின் நுழைவுப் பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.