சென்னை: பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
விரிவாகப் படிக்க.. தமிழக நிதிநிலை அறிக்கை - முழு விவரம்
கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்
அதில் அவர் அறிவித்திருப்பதாவது, பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 அளவுக்குக் குறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வரிக் குறைப்பால், பெட்ரோல் விலையில் ரூ.3 குறையும். பெட்ரோல் மீதான வரிக்குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
பெட்ரோல் விலை குறைவதால், உழைக்கும் மற்றும் நடுத்தரக் குடும்பத்துக்கு நிவாரணமாக அமையும் என்று அறிவித்துள்ளார்.
உரிமைத் தொகை திட்டம்
உரிமைத் தொகை நிதியுதவியை இல்லத்தில் பணி செய்யும் இல்லதரசிகளுக்கு உதவும் வகையில் வழங்கப்பட வேண்டும் என்பதே நோக்கம்.
எனவே, குடும்பத் தலைவியாக இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என்று பரவிய தகவல் தவறானது.
உரிமைத் தொகை பெற தவறாக நினைத்து குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவர்களின் பெயர்களை மாற்ற வேண்டியது அவசியம் இல்லை.
தகுதிவாய்ந்த குடும்பங்களை கண்டறிய வரைமுறைகள் உருவாக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகே அமல்படுத்தப்படும்