'இயற்றலும் ஈட்டலும்..' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியுள்ளது. தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
கூட்டத் தொடரில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
இதில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் உரையை திருவள்ளுவரின்
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு!
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.
குறளின் பொருள்: பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலிலும் வல்லவனே அரசன்.