பட்ஜெட் உரைக்கு முன்னதாக பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர், பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கியவுடன் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் தாக்கல் செய்தபிறகு பேச வாய்ப்பளிக்கப்படும் என்று அவைத் தலைவர் கூறினார். எனினும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.