கரோனா தொற்றால் உயிரிழந்த 32 மருத்துவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணை: இந்தியா முழுவதும் கரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்த அரசு மற்றும் தனியாா் முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு பிரதான் மந்திரி காரிப் கல்யான் திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்த சில சுகாதாரப் பணியாளா்கள் மத்திய அரசின் திட்டத்தின் வழிமுறைகளுக்கு உள்படவில்லை.
இதையடுத்து தமிழக அரசு சாா்பில் அந்த சுகாதாரப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்த 43 மருத்துவா்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா்.
இந்த நிலையில் முதற்கட்டமாக கரோனா நோய் தொற்றால் 32 மருத்துவா்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.