விருதுநகர்: விருதுநகர் அருகே குல்லூர் சந்தையில், தகாத உறவு காரணமாக மனைவியை கட்டையால் அடித்து எரித்துக் கொலை செய்த கணவரை சூலக்கரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே குல்லூர் சந்தையை சேர்ந்தவர் நாகமுத்து (33), மனைவி நிர்மலா (30). இவர்கள் இருவரும் வேறு சிலருடன் தகாத உறவு வைத்திருந்தாராம். இதுதொடர்பாக கணவர் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு நிர்மலாவை வீட்டு அருகே உள்ள கொட்டகையில் வைத்து கட்டையால் நாகமுத்து தாக்கியுள்ளார். அதன் பின்னர் நிர்மலாவை அதே இடத்தில் வைத்து எரித்து சாம்பலாக்கி உள்ளார்.
தனது சகோதரி நிர்மலா காணவில்லை என்று சகோதரர் மூர்த்தி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நாகமுத்துவை போலீசார் விசாரித்தபோது மனைவியை எரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாகமுத்துவை போலீசார் சனிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.