திருப்பூர்: திருப்பூரில் காங்கிரஸ் சார்பில் 75 ஆவது சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் 20 பேருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தியாகிகளின் வரலாறு புத்தகமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியின் பொதுச்செயலாளர் பி.ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.பத்மநாபன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.