தருமபுரி: தருமபுரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவில் 30 பேருக்கு ரூ.52 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இவ் விழாவில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வண்ண பலூன்களும், அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களும் வானில் பறக்க விடப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் ச.திவ்யதர்சினி திறந்த வாகனத்தில் சென்று காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், பல்வேறு துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.52.53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல கரோனா பெருந்தொற்று காலத்தில் சேவையாற்றிய பல்வேறு துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன், கூடுதல் ஆட்சியர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.