ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத்தலைவரின் முடிவுக்காக காத்திருப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தன்னை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி குற்றவாளி ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள், பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
எழுவர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் முடிவுக்காக காத்திருப்பதால், முன்னதாக இதே கோரிக்கையை முன்வைத்த குற்றவாளி நளினி வழக்கை தள்ளுபடி செய்ததைப் போன்று இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது. முடிவுகள் எடுக்கப்படும் நிலையில், மனுதாரர் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.