அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயரை சூட்டுங்கள் என்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் உதயநிதி வலியுறுத்தினார்.
நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் விவகாரம் சட்டப்பேரவையில் இன்று விவாதிக்கப்பட்ட போது, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நீட் தேர்வுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறியதோடு, மத்திய அரசு மீது எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மத்திய அரசு எதைச் செய்தாலும் எதிர்க்க மாட்டோம், நல்லதைச் செய்தால் வரவேற்போம் என்று கூறினார்.
இதையும் படிக்கலாமே.. 'நம்பி ஏமாறாதீர்கள்.. இப்படியும் சொல்வார்கள்' காவல்துறை அலர்ட்
மேலும், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனிதா பெயரை சூட்டுங்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று நீட் தேர்வு குறித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்.
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்ந்து, நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அளித்த அறிக்கையை பரிசீலித்து சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.