திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏரியில் குவியல்களாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நீர் ஆதாரம் மாசடைவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு கால்நடைகள் அருந்துவதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகாரின் பேரில் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், இருளஞ்சேரி கிராமத்தில் உள்ள ஏரி நீர் ஆதாரத்துடன் உள்ளது. இக்கிராமத்திற்கு ஆழ்குழாய் கிணறு, விவசாய கிணறுகள் மற்றும் கால்நடைகளுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஏரியில் குவியல், குவியல்களாக மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதனால் ஏரியில் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதோடு மருந்து கழிவுகளால் நீர் மாசடைவதோடு, இப்பகுதியைச் சேர்ந்த கால்நடைகள் நீர் பருகுவதால் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
எனவே இதுதொடர்பாக அக்கிராம மக்கள் அங்குள்ள வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
இதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை செய்ததில், இக்கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவி தமிழ்செல்வி தம்பி தமிழ்வாணன் என்பது தெரியவந்தது. இவர் மறைமலை நகர் பகுதியில் தனியார் மருந்து தொழிற்சாலையில் இருந்து கொண்டு வந்து ஏரியில் கொட்டி வருவதும், இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.