சென்னை: சமையல் எரிவாயு உருளையின் விலையைக் குறைப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டு, ரூ.875}ஆக விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். எனவே, மத்திய அரசும், மாநில அரசும் சமையல் எரிவாயு உருளையின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டுக் கூறியது:
எரிவாயு உருளையின் மூலம் தமிழக அரசுக்கு எந்த வருமானமும் வரவில்லை. விலையைத் தீர்மானிப்பது எல்லாம் மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும்தான். எரிவாயு உருளையின் விலையைக் குறைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். ஆனால், விலையைக் குறைப்பதற்கான அதிகாரமும் மாநில அரசிடம் இல்லை. சமையல் எரிவாயு உருளையில் இருந்து மாநில அரசுக்கு வருமானமும் இல்லை என்றார்.