வாழப்பாடி: வாழப்பாடி அருகே 7 மாத கர்ப்பிணிப் பெண் மாயமானது குறித்து, வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி அடுத்த புதுப்பாளையம் புறவழிச்சாலை பகுதியைச் சேர்ந்த கோகுல்நாத் (28) என்பவருக்கும் ஸ்ரீரஞ்சனி (21), என்பவருக்கும் இரு ஆண்டுக்கு முன் திருமணமானது. ஸ்ரீரஞ்சனி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஸ்ரீரஞ்சனி, வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் கோகுல்நாத் எழுந்து பார்த்தபோது காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கோகுல்நாத், ஸ்ரீரஞ்சனியின் தோழிகள், உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி மாயமானது குறித்து வாழப்பாடி போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து, வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.