ஓணம் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கேரளப் பெருமக்கள் எவ்வித மொழி வேறுபாடுமின்றி தமிழர்களோடு இரண்டறக் கலந்து நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட லட்சக்கணக்கான மக்கள் பல சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்தி மிகச் சிறப்பான வகையில் பணியாற்றி வருகின்றனர். மொழி ரீதியாக எந்த வேறுபாடும் இல்லாமல் சமத்துவம், சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை கடைபிடித்து, சமூக அமைதிக்கு உறுதுணையாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், இந்தியாவிலேயே அதிக கரோனா தொற்று காரணமாக கேரள மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது. கரோனாவிற்கு எதிராக அம்மாநில மக்கள் மேற்கொள்கிற முயற்சிகளில் வெற்றி பெற வேண்டுமென விரும்புகிறோம்.
இதையும் படிக்க- தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்: தாஜ்மகாலை இனி இரவிலும் ரசிக்கலாம்
ஓணம் திருநாள், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, சகோதர சகவாழ்வை நடைமுறைப்படுத்துகிற வகையில், கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, தமிழர்களுடைய ஒட்டுமொத்த வளர்ச்சியில் எவ்வித வேறுபாடுமின்றி பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.