மூவர் கூட்டணி.. முக்கோண ஊழல்.. முறியடிக்கப்பட வேண்டும்: மநீம

புளியந்தோப்பு குடியிருப்புச் சம்பவத்தில், மூவர் கூட்டணியின் முக்கோண ஊழல் முறியடிக்கப்படவேண்டும்  என்று மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
மூவர் கூட்டணி.. முக்கோண ஊழல்.. முறியடிக்கப்பட வேண்டும்: மநீம
மூவர் கூட்டணி.. முக்கோண ஊழல்.. முறியடிக்கப்பட வேண்டும்: மநீம

சென்னை: புளியந்தோப்பு குடியிருப்புச் சம்பவத்தில், மூவர் கூட்டணியின் முக்கோண ஊழல் முறியடிக்கப்படவேண்டும்  என்று மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.

புளியந்தோப்பு சம்பவம் குறித்து செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில், “புளியந்தோப்பு தரமற்ற கட்டுமான விவகாரத்தில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்புகள் விசாரிக்கப்படவேண்டும்..!!

பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவேண்டும்..!! ஊழலுக்கு ஒத்துழைத்த உயர்மட்ட அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும்..!! மூவர் கூட்டணியின் “முக்கோண ஊழல்” முறியடிக்கப்படவேண்டும்..!!” என்று மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், நமது மாநிலம், குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் தரமற்ற கட்டுமானப் பணிகளால், உச்சபட்ச ஊழலால் ஏழை மக்களின் நம்பிக்கை நொறுங்கிப் போயுள்ளது.

உயிராவது மிச்சமாகுமா என்ற அச்சமும் அவர்களிடம் எழுந்துள்ளது. சமீபத்தில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு வீடுகள், மக்கள் வசிக்கப் பாதுகாப்பானது அல்ல என்பது குறித்து வெளியான ஆதாரங்கள் அதிர்ச்சியடையச் செய்கின்றன. இச்சம்பவம் குறித்து, அரசியல் களத்தில் முதல்குரலாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்  குரல் ஒலித்தது. சட்டசபையிலும் இவ்விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, எழும்பூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு,கே.பி.பார்க் பகுதி 1ல் குடிசை மாற்றுவாரியத்தின் சார்பாக ரூ.112.6 கோடி செலவில் 864 வீடுகள் கட்டித்தருவதற்கு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில்(2016ல்) திட்டமிடப்பட்டு 2019ல் கட்டிமுடிக்கப்பட்டது. (1977-78ல் கட்டப்பட்ட வீடுகள் சிதிலமடைந்துவிட்டதால், இடித்துவிட்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டது) இதற்கான ஒப்பந்தத்தை ’பி.எஸ்.டி எம்பயர் கன்ஸ்ட்ரக்க்ஷன்’ என்ற நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதாகவும்; ஏற்கனவே இந்நிறுவனத்தின் மூலம் செய்துமுடிக்கப்பட்ட கட்டுமானங்கள் குறுகியகாலத்திற்குள்ளாகவே உடைந்துவிழுந்துள்ளன என்ற தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளநிலையிலும் இந்நிறுவனத்திற்கு தமிழக அரசின் பல்வேறு டெண்டர்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது எப்படி என்ற கேள்வியை ஆதாரங்களின் மூலமாக ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

தென்பெண்ணை ஆற்றில் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, மூன்று மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில் அதன் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர் தரமில்லாமல் அணையைக் கட்டியதால்தான் தடுப்பணையின் சுவர் உடைந்து, மதகு அடித்துச் சென்றிருக்கிறது என்று பொதுப்பணித் துறை பதிலளித்தது. இதேபோல காஞ்சிபுரத்தில் ரூ. 60 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையின் அடித்தளம் மோசமாக இருந்தது; செங்கல்பட்டு வாயலூர் பாலற்றில் கட்டப்பட்ட தடுப்பணையிலிருந்து நீர் கசிவு இப்படித் தரமில்லாத பணிகளின் பட்டியல் விரிகிறது.

புளியந்தோப்பு சம்பவம் போன்ற தருணங்களில், இவ்விஷயமானது பொதுவெளியில் பரபரப்பாகப் பேசப்படும். ஆனால் இதுபோன்ற முறைகேட்டிற்குப் பின்புலத்தில்இருந்த அமைச்சர், உயர் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் மீது பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. 

இந்த மூவர் கூட்டணி செய்யும் “முக்கோண ஊழலால்” பாதிக்கப்பட்டு தெருவில் நிர்கதியாய் நிற்பது பொதுமக்களே. மூன்று தரப்பினர் மீதும் நடவடிக்கை அவசியமாகிறது. நடவடிக்கைகளின் முதற்கட்டமாக, கடந்த 10ஆண்டுகளில் பி.எஸ்.டி. நிறுவனம் கட்டிமுடித்த பணிகள் அனைத்தையும் தரப்பரிசோதனை செய்யவேண்டும்; சோதனைகளில் தரக்குறைவு உறுதிசெய்யப்படும் பட்சத்தில், ”பி.எஸ்.டி எம்பயர் கன்ஸ்ட்ரக்ஷன்” நிறுவனத்தை ”தடை செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்” பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுபோல் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களின் பணிகளும் மறுஆய்வு செய்யப்படவேண்டும். கட்டப்பட்ட ஓரிரு ஆண்டிற்குள் பாழடைந்த கட்டடமாய் இடிந்துவிழும் புளியந்தோப்பு கட்டுமானம் என்பது துறையின் அமைச்சர் என்றமுறையில் முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நேரடிக் கண்காணிப்பில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் கண்ணசைவு இல்லாமல் இதுபோன்ற மாபெரும் முறைகேடுகள் நடப்பதற்குச் சாத்தியமே இல்லை. ஆகவே, முன்னாள் அமைச்சர் வேலுமணியோடு தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் விசாரிக்கப்பட்டதுபோல் ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

உயர்மட்ட அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல், முறைகேடு நடப்பதில்லை. ஒப்புக்கு கீழ்மட்டத்தில் உள்ள ஓரிரு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வழக்கமான கண்துடைப்பு நடவடிக்கையைத் தாண்டி உயர்மட்ட அதிகாரிகளையும் விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊழலின் முக்கோணங்களான அமைச்சர் - அதிகாரி - ஒப்பந்ததாரர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்..? என்று செந்தில் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com