சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் சனிக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்து வருகின்றது. சங்ககிரியில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்து கொண்டே இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
சங்ககிரி நகரில் திடீரென்று சனிக்கிழமை அதிகாலை முதல் காலை 9 மணி வரை கன மழை பெய்தது. பின்னர் குளிர்ந்த காற்றுடன் கூடிய தொடர்ந்து லேசான மழை பெய்து கொண்டே உள்ளன. நகர் பகுதியில் காலை 7 மணி வரை 37 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மழை பெய்து கொண்ட இருப்பதால் பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே வராமல் உள்ளடங்கியே உள்ளனர்.
அதனையடுத்து நகர் பகுதியில் உள்ள சாலைகள், தேநீர் கடைகள் விற்பனைகள் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றன. சங்ககிரி பழைய பேருந்து நிலைய பகுதியில் இருந்து சேலம், எடப்பாடி, திருச்செங்கோடு, பவானி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் பேருந்துகள் மூலம் தினசரி பயணம் செய்து வருகின்றனர்.
சங்ககிரியில் சனிக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையினையடுத்து மழை சாரலில் மலை.
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக அரசு பேருந்துகள் சேலம், ஈரோடு, எடப்பாடி, திருச்செங்கோடு, பவானி உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.
அதனையடுத்து சனிக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் பயணம் செய்ய பழைய பேருந்து நிலைய வளாகம், புதிய எடப்பாடி சாலை பிரிவு, திருச்செங்கோடு சாலை பிரிவு, காவல்நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் காத்திருந்த பயணிகள் பேரூராட்சியின் சார்பில் ஒரு நிழற்கூடம் கூட அமைப்படாததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
எனவே அப்பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் நிழற்கூடங்களை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.