திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தில் தோட்டத்துவீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் எரிந்த மக்காச்சோள தட்டைக்குள் கருகிக் கிடந்த நிலையில் காவல்துறையினர் சந்தேக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (52). விவசாயம் செய்து வரும் இவருக்கு வளர்மதி (45) என்கிற மனைவியும் சிவரஞ்சனி (21) என்ற மகளும் கார்த்திகேயன் (18) என்ற மகனும் இருந்தனர்.
மகன் மற்றும் மகள் இருவருமே கல்லூரியில் படித்து வந்த இந்நிலையில், இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பழனி தீயணைப்பு படையினருக்கு மக்காச் சோளத் தட்டை தீப்பிடித்து எரிவதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப்படை வீரர்கள் தீயை அணைக்க முயன்ற பொழுது மக்காச்சோளத் தட்டைக்குள் இறந்த நிலையில் சடலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, ஆயக்குடி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிக்கலாமே.. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடிவரும் தடுப்பூசி: தொலைபேசி எண் அறிவிப்பு
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் முருகேசன் என்ற சின்னராசு, மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகியோரது உடல்கள் என தெரியவந்தது.
நேற்று வேலாயுதம்பாளையம் புதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் திடீரென மக்காச்சோள தட்டைக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள என்னக் காரணம்? என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தென்மண்டல ஐஜி., அன்பு, திண்டுக்கல் சரக டிஐஜி., விஜயகுமாரி, மாவட்ட எஸ்பி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். எஸ்பி., சீனிவாசன் அளித்த பேட்டியில், வீட்டில் எந்த பொருட்களும் காணாமல் போகவில்லை என்றும் நான்கு பேரும் இறந்தது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே விபரங்கள் தெரியவரும் என்றார். கடன் பிரச்சினை இல்லாத நிலையில், நடந்திருக்கும் இச்சம்பவம் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் சம்பவம் நிகழ்ந்துள்ளதா? என்ற கோணத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் ரூபி உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.