
திருக்குவளையிலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு இல்லத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம்
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நாகை மாவட்டம் திருக்குவளையிலுள்ள அவர் பிறந்த வீட்டிலிருந்து, எக்ஸ்னோரா இன்டர்நேசனல் மற்றும் திருவாரூர் மாவட்ட வாலிபால்(கையுந்து பந்து) விளையாட்டு கழகம் சார்பில் பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவரும் திமுக மாவட்ட பிரதிநிதியுமான இல.பழனியப்பன் தலைமை வகித்தார்.
மாரத்தான் ஓட்டத்தை நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கௌதமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவாரூர் வேலுடையார் கல்விக் குழும தலைவர் எஸ்.எஸ்.தியாகபாரி, தமிழ்நாடு வாலிபர் சங்கம் மாநில துணைத் தலைவர் கே.ஜி.சீலன்,கீழையூர் ஒன்றிய கழக செயலாளர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக எக்ஸ்னோரா இன்டர்நேசனல் அமைப்பை சேர்ந்த திருக்குவளை எல்.பி. கரிகாலன் வரவேற்புரை வழங்கினார்.
மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கௌதமன்.
திருக்குவளையிலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு இல்லத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டமானது, கீழவீதி, வடக்குவீதி வழியாக பையூர், காருகுடி, அகர கொளப்பாடு வழியாக கொளப்பாட்டில் நிறைவடைந்தது.
இதில், பள்ளி, கல்லூரி மற்றும் திருவாரூர் மாவட்ட கையுந்து பந்து விளையாட்டு கழகத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியினை எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் கே. ரஞ்சித்குமார் ஒருங்கிணைத்தார்.
உடன் வேளாங்கண்ணி திமுக பேரூர் கழக பொறுப்பாளர் மரிய சார்லஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோ.பா. மலர்வண்ணன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆர்.ஏ.டி. அண்ணாதுரை அண்ணாதுரை, மாநில வாலிபால் விளையாட்டு கழக துணை தலைவர் கே.ஜி.சீலன், கையுந்து பந்து பயிற்றுனர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராமச்சந்திரன், கிளைச் செயலாளர் பி. தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த செல்வா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.