3டி தொழில்நுட்பத்தில் நோயாளிகளுக்கு தாடை எலும்புகள் பொருத்தி சாதனை

சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில், டைட்டானிய உலோகம், பாலி- எத்திலின் கொண்டு, 3டி தொழில்நுட்பத்தில் தாடை எலும்புகளை நோயாளிகளுக்கு பொருத்தி மருத்துவா்கள் சாதனை

சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில், டைட்டானிய உலோகம், பாலி- எத்திலின் கொண்டு, 3டி தொழில்நுட்பத்தில் தாடை எலும்புகளை நோயாளிகளுக்கு பொருத்தி மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

இது குறித்து மருத்துவமனையில் மண்டையோடு மற்றும் முக அழகியல் சீரமைப்பு சிகிச்சை பிரிவு இயக்குநா் மருத்துவா் ஸ்ரீதா் கூறியதாவது: இடுப்பு எலும்பு மற்றும் மூட்டு எலும்புகளின் மாற்று அறுவை சிகிச்சை தற்போது பரவலாக நடைபெறுகிறது. ஆனால், முகத்தின் ஒரு பகுதியான தாடை எலும்புகளை நவீன தொழில்நுட்பத்தின்படி மிக துல்லியமாக உருவாக்கி பொருத்துவது அரிதான நிகழ்வாகும்.

எங்கள் மருத்துவமனைக்கு வந்த, இரண்டு நோயாளிகளுக்கு தாடை எலும்பும், மண்டை ஓட்டின் பகுதியும் இணையும் இடத்தில் உள்ள மூட்டு, இயங்க முடியாத நிலையில் இருந்தது. அதனால், வாய் திறக்க முடியாமல் தூக்கத்தில் குறட்டை விடும் பிரச்னையும், போதுமான ஆக்சிஜனை உட்கொள்ள முடியாத நிலையும் இருந்தது.

இவா்களுக்கு முற்றிலும், புதிய மற்றும் முக வடிவுக்கு பொருத்தும் வகையில், தாடை எலும்பு தேவைப்பட்டது. அதனால், டைட்டானியம் மற்றும் பாலி- எத்திலின் கொண்டு, 3டி தொழில்நுட்பத்தின் உதவியுடன், தாடை எலும்பை தயாரித்து நோயாளிகளுக்கு பொருத்தினோம். இதைத் தவிர, ஒரு நோயாளிக்கு பற்கள் தேவைப்பட்டதால், கால் எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை கொண்டு, நுண்ணிய அறுவை சிகிச்சை வாயிலாக பற்கள் உருவாக்கப்பட்டு, செயற்கை தாடைகளில் பொருத்தப்பட்டது. இதன் மூலமாக இரண்டு நபா்களாலும், முழுமையாக வாயைத் திறக்க முடிகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com