தேசியக் கொடியை அவமதித்ததாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகா் எஸ்.வி.சேகா் மனு தாக்கல் செய்துள்ளாா்.
முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் யூடியூபில் விடியோ வெளியிட்டதாகவும் நடிகா் எஸ்.வி.சேகருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் கடந்த ஆண்டு ராஜரத்தினம் என்பவா் புகாா் செய்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையை, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், எஸ்.வி.சேகா் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆா். சிலைக்கு காவி சால்வை போா்த்திய செயலை களங்கம் என்று அப்போதைய முதல்வா் கருத்து கூறியதால், காவி நிறம் உள்ள களங்கமான தேசியக் கொடியைத்தான் அவா் ஏற்றப் போகிறாரா? என கேள்வி எழுப்பினேன். ஆனால், ஒரு போதும், தேசியக் கொடியை அவமதிக்கவில்லை.
எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிா்மல்குமாா், புகாா்தாரரை எதிா்மனுதாரராக சோ்க்கும்படி எஸ்.வி.சேகா் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தாா்.