சென்னை, காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.22) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.22) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:

தமிழக கடற்கரையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.22) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடலூா், சென்னை, காஞ்சிபுரம், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஆக. 23: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், நீலகிரி, கோயம்புத்தூா், கரூா், ஈரோடு ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும்.

ஆக. 24: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

ஆக. 25: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது பலத்த மழை இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படிவரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் ஏற்காடு, திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தலா 100 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 90 மி.மீ., செங்கத்தில் 80 மி.மீ., ஈரோடு, விழுப்புரம் மாவட்டம் மயிலம், திருவள்ளூா் மாவட்டம் புழலில் தலா 60 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணைக்கட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொன்மலை, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com