குறுவை பருவத்தில் 3.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

குறுவை பருவத்தில் இதுவரை, 54 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டு 3.27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

கடலூர்: குறுவை பருவத்தில் இதுவரை, 54 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டு 3.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

கடலூரில் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: 

வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தமிழக அரசு புதிய வரலாறு படைத்துள்ளது. அந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையை சிலர் காழ்ப்புணர்ச்சியால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக விமர்சனம் செய்கின்றனர்.

நடப்பு குறுவை பருவத்திற்கான காப்பீடு ஏன் அறிவிக்கப்படவில்லை என்று விமர்சனம் எழுப்பப்படுகிறது. காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டியது தொடர் நடவடிக்கையாக அமைய வேண்டும். முந்தைய அதிமுக அரசு அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. இதனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக 3 முறை ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. இதனை இறுதி செய்வதற்கான கால அவகாசத்திற்குள் 4.90 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதுவரை, 54 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டு 3.27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் 655 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, இனிமேல் குறுவை சாகுபடிக்கான காப்பீடு தேவைப்படாது. எனினும், காப்பீடு இல்லாவிட்டாலும் பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து உள்ளார். 

எனவே, குறுவைக்கான காப்பீடை விவசாயிகள் கேட்கவில்லை. இன்னும், 20 நாள்களில் குறுவை சாகுபடி அறுவடையே முடிந்து விடும்.

20-21 ஆம் ஆண்டில் சம்பா பருவத்திற்கான நெல் உள்பட பல்வேறு பயிர்களுக்கு மாநில அரசு செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ.1,248.92 கோடியை கடந்த 16 ஆம் தேதி தான் அரசு விடுவித்துள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள நிலுவையில் ரூ.220 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.1,500 கோடி வரையில் பாக்கி வைத்துள்ளன. விரைவில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு பாக்கி தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். 

உரம் தட்டுப்பாடு இல்லை. தேவைப்படும் இடங்களுக்கு தேவையான அளவு அனுப்பி வைக்கப்படுகிறது. மற்ற பயிர்களுக்கு காப்பீட்டு பிரிமியம் செலுத்த வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். கால நீட்டிப்பு செய்யும் வாய்ப்பு இல்லை. கூட்டுறவு கடன் சங்கங்களில் வழக்கம் போல அனைத்து கடன்களும் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியின் போது தலைவர்களாக பொறுப்பேற்றவர்கள் தான் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.

மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம், காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், சட்டப்பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன், திமுக நிர்வாகிகள் பி.பாலமுருகன், கே.எஸ்.ராஜா, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com