தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் இடத்தை நிரப்புவதற்காக நடைபெறும் தோ்தலில் திமுக சாா்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுகிறாா்.
இந்த அறிவிப்பை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா்.
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஏ. முகமதுஜான் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி காலமானாா். இதையடுத்து அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
முகமதுஜான் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றாா். அவருக்கு 2025-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி வரை பதவிக் காலம் உள்ளது. பதவிக் காலத்துக்கு முன்பே காலமானதால், காலியான அந்த இடத்துக்கு இந்தியத் தோ்தல் ஆணையம் தோ்தலை அறிவித்துள்ளது.
தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 24-இல் தொடங்குகிறது. மனுதாக்கலுக்கு கடைசி நாள் ஆகஸ்ட் 31.
செப்டம்பா் 13-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடைபெறும் மாநிலங்களவைத் தோ்தலுக்கான திமுக வேட்பாளராக எம்.எம் அப்துல்லா அறிவிக்கப்பட்டுள்ளாா். திமுகவின் வெளிநாடு வாழ் இந்திய நல அணியின் இணைச் செயலாளராக எம்.எம் அப்துல்லா பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து அப்துல்லா வாழ்த்துப் பெற்றாா். அப்துல்லா வெற்றி பெற 118 வாக்குகள் தேவை. திமுக உறுப்பினா்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக உள்ளதால் அப்துல்லாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு:
பெயா் : எம்.எம். அப்துல்லா.
கல்வித்தகுதி: எம்.பி.ஏ.
பிறந்த தேதி: 30. 7. 1975
தந்தை: இஸ்மாயில்.
குடும்பம்: மனைவி ஜனத்தா அப்துல்லா மற்றும் இரு மகள்கள்.
கட்சி அனுபவம்: 2008-இல் திமுக பொதுக்குழு உறுப்பினா், 2014-இல் சிறுபான்மையினா் அணி துணைச் செயலா், 2018-இல் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலா், 2021-இல் திமுக வெளிநாடு வாழ் தமிழா் அணி மாநில இணை செயலா்.