வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நகைக்கடைகள் இன்று மூடப்பட்டன.
அனைத்துப் பகுதிகளிலும் நகைக் கடைகளில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான நகைகளையும், மத்திய அரசின் ஹால்மார்க் முத்திரை பெற்ற பிறகே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
ஆனால் ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையங்கள் குறைந்தளவிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து நகைக் கடைகளுக்கும் உற்பத்தி செய்யப்படும் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதில் காலதாமதம், சிரமமும் ஏற்பட்டு வருகிறது. எனவே, அனைத்து பகுதிகளிலும் போதிய அளவிற்கு ஹால்மார்க் முத்திரை மையங்களை திறந்து, எளிமையான முறையில் துரிதமாக ஹால்மார்க் முத்திரை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதுவரை நகைக்கடை உரிமையாளர்கள், தங்க நகைகள் விற்பனை செய்வதற்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் கரோனா பரவல் குறைந்து வருகிறது: ஆனால்..
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், அனைத்து நகைக் கடைகளும் இன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை மூடப்பட்டிருந்தது.
இதுகுறித்து வாழப்பாடி வட்டார நகைக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகி குபாய் என்கிற குபேந்திரன் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிட்டு விற்பனை செய்யும் திட்டத்திற்கு, நாங்கள் வரவேற்பும் ஆதரவும் தெரிவிக்கின்றோம். ஆனால், ஹால்மார்க் மையங்கள் குறைந்த அளவில் காணப்படுவதால், அனைத்து விதமான நகைகளையும் ஹால்மார்க் முத்திரையிட்டு நுகர்வோருக்கு வழங்குவதில் பெரும் சிரமம் நீடித்து வருகிறது. எனவே ஹால்மார்க் முத்திரை மையங்களை அதிகப்படுத்தி அனைத்து பகுதிகளிலும் திறக்க வேண்டும்.
இது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க, இன்று காலை 9 மணி முதல் 11 30 மணி வரை அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றார்.