கூத்தாநல்லூர்: வெண்ணாற்றில் வெங்காயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் குவிந்துள்ள வெங்காயத் தாமரைச் செடியால், விவசாயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
கூத்தாநல்லூர்: வெண்ணாற்றில் வெங்காயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் குவிந்துள்ள வெங்காயத் தாமரைச் செடியால், விவசாயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக விவசாய அணி மாநிலச் செயலாளர் ஹெச்.எம்.டி.ரஹ்மத்துல்லாஹ் கூறியது.

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில், பாமணி, கோரையாறு, வெண்ணாறு என மூன்று கிளை ஆறுகளாகப் பிரிகிறது. தொடர்ந்து, நீடாமங்கலம் ஒளிமதி வழியாக, வெண்ண வாசல் என்ற இடத்தில், வெண்ணாறு, பாண்டவையாறு எனவும், அத்திக்கடை, வாழாச்சேரி என்ற இடத்தில், மீண்டும் வெண்ணாறு, வெள்ளியாறு எனவும் இரண்டாகப் பிரிகிறது.

இதில், வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், பண்டு தக்குடி , வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாக அரிச்சந்திரா நதியில் கலந்து விடுகிறது. வெண்ணாற்றிலிருந்து முதன்மை வாய்க்கால்கள் பெரியதும்,சிறியதுமாகப்  பிரிந்து செல்கிறது.

மேலும், பல கிளை வாய்க்கால்களுமாகப் பிரிந்து பாசனத்திற்குச் செல்லும் படியாக உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் அறிவித்த படி, ஆறுகள் தூர் வாரப்பட்டது. ஆற்றின் ஓரங்களில் தேவையற்று காணப்பட்ட மரங்களையும், செடிகளையும் அகற்றினர்.

தொடர்ந்து, இரண்டு பக்கக் கரைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. பாசனத்திற்கு தண்ணீர் செல்லக் கூடிய சில கிளை வாய்கால்களில் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டு, வாய்க்காலில் மண்டிக் கிடந்த கழிவுகளை அகற்றப்பட்டன.

திறந்து விடப்பட்ட தண்ணீரும் கரை புரண்டு வந்தது. கூத்தாநல்லூர் பாய்க்காரப் பாலம் முதல் அருகில் உள்ள இரும்புப் பாலம் வரையிலும், வெங்காயத் தாமரைச் செடிகள் மண்டிக் குவிந்துள்ளன. ஆற்றில் தண்ணீர் வந்தும், வெங்காயத் தாமரைக் கழிவுகள் அகற்றப்படாததால், ஆற்றுத் தண்ணீர் தொடர்ந்து மேற்கொண்டு செல்ல முடியவில்லை. ஆற்றுத் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளன.

இதனால், வெண்ணாற்றிலிருந்து ஆற்றுத் தண்ணீர் பாசனத்திற்கும் செல்ல முடியவில்லை. இதனால், கூத்தாநல்லூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களும் பாதிப்படையும் அவல நிலை ஏற்பட்டுள்ளன. மேலும், ஆற்றில் குவிந்துள்ள வெங்காயத் தாமரைச் செடிகள், காட்டாமணிகள் மற்றும் குப்பைகள் மற்றும் மாமிசக் கழிவுகள் தேங்கி நிற்கின்றன.

இதில், பூச்சிகள், தேள்கள், பாம்புகள் உள்ளிட்ட விஷச் சந்துகள் உற்பத்தியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில், துர்நாற்றம் வீசுவதுடன், மலேரியா,காலரா, சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

உடனே, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, குவிந்துள்ள கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றிட உத்தரவிட வேண்டும்.மேலும், அப்பகுயில், கிருமி நாசினி தெளித்தும், ப்ளீச்சிங் பவுடர் தூவவும் ஆணையிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் செயல்படுத்திட வேண்டும். 24 மணி நேரத்திற்குள் அள்ளப்படவில்லை என்றால், பொது மக்களுடன் வெண்ணாற்றின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com