293-வது மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றார் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் 

293-வது மதுரை ஆதீனமாக ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
293-வது மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றார் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் 
293-வது மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றார் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் 

293-வது மதுரை ஆதீனமாக ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மடத்தில் தினசரி அன்னதானம், ஆதினத்திற்குச் சொந்தமான கோயில்களில் திருப்பணிகள், மீனாட்சியம்மன் கோயிலில் நாள்தோறும் உஷாபிஷேகம் உள்ளிட்ட 6 உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதினத்தின் 292வது பீடாதிபதியாக இருந்துவந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த 13ஆம் தேதி முக்தி அடைந்தார்.

இதனையடுத்து 293-ஆவது மதுரை ஆதினமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக  சுவாமிகளுக்கு பட்டம் சூட்டப்பட்டது. இந்நிலையில் 10 நாள்கள் நிறைவடைந்த நிலையில் திங்கள் கிழமை பீடாதிபதியாக பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. 

இன்று காலை முனிச்சாலை பகுதியில் 292வது ஆதினம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குருபூஜை நடத்தப்பட்டது.

மதுரை ஆதீனத்தின் 293-ஆவது ஆதீனமாக மதுரை ஆதீன மடத்தில் உள்ள பீடத்தில் அமரும் ஞான பீடாரோகன நிகழ்வு தருமைபுர ஆதினத்தின் 27வது குரு மகாசன்னிதானம் கையிலை மாசிலாமணி தேசிக ஞானதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்பாக நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனத்தின் 293 பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்டார். 

மேலும் மதுரை ஆதீனத்தின் சார்பில் விடுபட்டுப் போன மதுரை மீனாட்சியம்மன் கோவில் உஷாகால கட்டளைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும், மதுரை ஆதின திருமடத்தில் நித்ய பூஜை, மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படும், மதுரை ஆதினத்திற்கு சொந்தமான 4 கோயில்களிலும் நாள்தோறும் நித்யபடி பூஜைகள் நடத்தப்படவும், குடமுழுக்கு உள்ளிட்ட திருப்பணிகளை விரைவுப்படுத்துவது உள்ளிட்ட 6 உத்தரவுகளில் புதிய ஆதீனம் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினம், பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம்  உள்ளிட்ட பல்வேறு மடங்களின் ஆதீனங்கள் சார்பிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. 

இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் மதுரை ஆதீனத்திடம் ஆசிபெற்றுச்சென்றனர்.

பீடத்தில் அமர்ந்த பின் மதியம் 1.30 மணியளவில் மாகேஸ்வர பூஜையும், இன்று மாலை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் வழிபாடும், அதனையடுத்து குருமூர்த்த சிறப்பு வழிபாடும், தொடர்ச்சியாக இரவு 8 மணிக்குமேல் பட்டினப்பிரவேசமும் கொலுக்காட்சியும் நிகழவுள்ளது.

மதுரை ஆதின மடத்தின் 293வது ஆதினமாக பொறுப்பேற்கும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த திருவாளர் காந்திமதிநாதன் பிள்ளை - திருமதி ஜானகி அம்மை தம்பதியினருக்கு 25.03.1954 ல் மகனாக பிறந்தார்..

இவரது இயற்பெயர் பகவதிலட்சுமணன்.

 தனது 21ஆவது வயதில் குன்றக்குடி ஆதீனத்தில் ஆறுமுகத்தம்பிரானாகவும், 1976ஆம் ஆண்டு முதல் 1980வரை தருமையாதீனத்தில் நெல்லையப்பத் தம்பிரானாகவும், 1980 முதல் 2019ஆம் ஆண்டு வரை திருவாவடுதுறை ஆதீனத்தில் சுந்தரமூர்த்தித் தம்பிரானாக 39 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்கள். 

மதுரை ஆதீனத்தில் கடந்த 2019 ஜூன் 6ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதரால் சமய, விசேஷ நிர்வாண தீட்சை செய்து ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டு இளைய ஆதினமாக அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com