சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தின் மீது பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை பேரவையில் தாக்கல் செய்தார்.
அதில், சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரி, பூண்டி நீர்தேக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றை தூர்வாரும் பணிகள் ரூ.20.44 கோடியில் நடைபெற்று வருகின்றன.
ரூ.9.90 கோடியில் செங்குன்றம் ஏரி தூர்வாரும் பணி தொடங்கப்பட உள்ளது. மேற்கண்ட 4 ஏரிகளை தூர்வாருதல் மூலம் 1.904 டிஎம்சி அடி கொள்ளளவு மீட்கப்படும்.
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்க, காட்டூர் மற்றும் தட்டமஞ்சிய ஆகிய இரட்டை ஏரிகளின் கொள்ளளவினை 58.27 மில்லியன் கன அடியிலிருந்து 350 மில்லியன் கன அடியாக மேம்படுத்த ரூ.62.36 கோடி மதிப்பீட்டில் நீர்த்தேக்கம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டில் கொளவாய் ஏரியை மீட்டெடுத்தல், விரிவாக்கப்பட்ட சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் குடிநீர் வழங்குதலை அதிகரிக்க ரூ.60 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரியின் கொள்ளளவு 330 மி. கன அடியிலிருந்து 650 மில்லியன் கன அடியாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.