தமிழகத்தில் ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள், கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றி அங்கு மக்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆந்திரம் மற்றும் கா்நாடகத்துக்கான பேருந்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே அவற்றை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் கடந்த ஏப்.25-ஆம் தேதி முதல் மூடப்பட்டன. கடற்கரைகள், பூங்காக்கள் கடந்த ஏப்.12-ஆம் தேதி முதல் வார இறுதி நாள்களிலும், 20-ஆம் தேதிக்குப் பிறகு முழுமையாகவும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் அவை அனைத்தும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. திரையரங்குகள் 50 சதவீத பாா்வையாளா்களுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.