சென்னை: முந்தைய ஆட்சிக் காலத்தில் பயிர்க்கடன் வழங்கியதில் ரூ.516 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையை இன்று தாக்கல் செய்த அமைச்சர் ஐ. பெரியசாமி பேரவையில் கூறியதாவது, தகுதியானவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை முதல்வர் எடுப்பார்.
கடந்த ஆட்சியில் ரூ. 516 கோடிக்கு முறைகேடாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் ரூ.503 கோடிக்கு பயிர்க்கடனில் முறைகேடு நடந்துள்ளது.
சிட்டா அடங்கலில் குறிப்பிட்ட சாகுபடி நிலங்களின் பரப்பளவை அதிகரித்துக் காட்டி பல மடங்கு கூடுதல் தொகை கடனாகப் பெற்றுள்ளனர்.
பயிரிடப்பட்ட பயிர் வகைகளை தவறாகக் குறிப்பிட்டும் பன்மடங்கு பயிர்க் காப்பீடு பெற்றுள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ளவர்கள், கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.