அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை அதிமுக முழு மனதுடன் ஆதரிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு சட்ட மசோதாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மசோதா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை அதிமுக வரவேற்கிறது. முதல்வர் முன்மொழிந்த மசோதாவை முழு மனதுடன் அதிமுக ஆதரிக்கிறது என்றார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து குரல் வாக்கெடுப்பின் மூலம் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.