திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு என இலங்கை தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்து கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கீழ் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். 110 விதியின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படவுள்ளது. முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாகக் கட்டித்தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு என இலங்கை தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்து திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "வாழ்விடமிழந்து, வாழ்விழந்து, நாடு இழந்து, தன எதிர்காலம், தன் பிள்ளைகளின் எதிர்காலம் என்று எல்லாம் கேள்விக் குறியாக்கப்பட்ட நிலையில், முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பரிதவித்த இலங்கை தமிழ் மக்களுக்கு எதிர்கால திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்வர் அவர்களுக்கு நன்றி. கண்ணீர்க் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு" என பதிவிட்டுள்ளார்.