வாழப்பாடி: அரசு மாதிரிப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடு வீடாகச் சென்று பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் பிரசாரம் செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மாதிரிப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அரசுப்பள்ளியின் சிறப்பு, அரசு வழங்கும் சலுகைகள், அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை குறித்து துண்டு பிரசுரம் வினியோகித்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பொதுமக்களும், பெற்றோர்களும் ஆதரவும் பாராட்டு தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பழமையான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒன்றாகும். விசாலமான கட்டடங்கள், ஆய்வகங்கள், விளையாட்டு திடல் வசதிகளுடன் காணப்படும் இப்பள்ளி நடப்பு கல்வியாண்டில் அரசு மாதிரிப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதனையடுத்து, எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கு.கலைஞர் புகழ் தலைமையில், நிர்வாகிகள் கோபிநாத், குணாளன், ரமணி, தலைமையாசிரியர் ரவிசங்கர் மற்றும் ஆசிரியர்கள் கொண்ட குழுவினர், இப்பள்ளியின் சிறப்பு, அரசு வழங்கும் சலுகைகள், அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை குறித்து, துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வீடுவீடாக சென்று வினியோகித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
வாழப்பாடி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.சி.செல்வம், முன்னாள் வார்டு உறுப்பினர் கமல்ராஜா, தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலவர் பாண்டியன், ஆட்டோ சுரேஷ், மணி, பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்கு, பொதுமக்களும்,பெற்றோர்களும், வரவேற்பும் பாராட்டும் தெரிவித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கு.கலைஞர்புகழ், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.