இலங்கை மற்றும் தமிழகம் இடையே போக்குவரத்தைத் தொடங்க வேண்டுமென பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தாா்.
இலங்கைத் தமிழா்களுக்கு நலத் திட்ட உதவிகள் குறித்து அறிவிப்புகளை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அரசியல் கட்சியினா் பேசினா். அப்போது, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசியது:
உஜ்வாலா 2-ஆவது திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, ஆதாா் போன்ற ஆவணம் இல்லாமலேயே எரிவாயு இணைப்புப் பெற முடியும். இந்தத் திட்டத்துடன் இலங்கைத் தமிழா்களை இணைக்க சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும். இதன்மூலம் இப்போது அரசு அறிவித்த திட்டத்தில் இருந்து ரூ.6 கோடி அளவுக்கு மிச்சப்படும். மாநில அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தாலோ என்னவோ, தமிழகம்-இலங்கை இடையே படகு போக்குவரத்து இல்லாமல் காரைக்கால்-காங்கேசன் துறை இடையே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தனுஷ்கோடி, தலைமன்னாரில் இருந்து இலங்கைத் தீவுக்குச் செல்ல பாலத்தை அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.