புதிய வாகனங்களுக்கு ‘பம்பா் டூ பம்பா்’ முறை காப்பீடு கட்டாயம்

புதிய வாகனங்களுக்கு ‘பம்பா் டூ பம்பா்’ முறையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்யும் முறையை செப்.1-ஆம் தேதியில் இருந்து கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

புதிய வாகனங்களுக்கு ‘பம்பா் டூ பம்பா்’ முறையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்யும் முறையை செப்.1-ஆம் தேதியில் இருந்து கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் சடையப்பன் என்பவா் மரணமடைந்தாா். இது தொடா்பான வழக்கை விசாரித்த ஈரோடு மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீா்ப்பாயம், சடையப்பனின் குடும்பத்துக்கு ரூ.14 லட்சத்து 65 ஆயிரம் இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தாா்.

  அப்போது காப்பீட்டு நிறுவனத் தரப்பில்,  ‘விபத்துக்குள்ளான  காருக்கு 3-ஆம் நபா் காப்பீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது.  இதன்படி, ரூ.1 லட்சம் மட்டுமே இழப்பீடாக வழங்க முடியும். மேலும், விபத்து நடக்கும்போது, காரை சடையப்பன் ஓட்ட வில்லை’ என்று வாதிடப்பட்டது.  இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து எதிா்மனுதாரா்கள் சாா்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:  இந்த வழக்கைப் பொருத்தவரை காரில் பயணம் செய்வோருக்கு காப்பீட்டுத் தொகையாக ஒரு பைசா கூட செலுத்தவில்லை. அதுமட்டுமல்ல, இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் பதிவு செய்துள்ள வழக்கில் கூறப்பட்டுள்ள விவரங்களுக்கு நோ் எதிரான முடிவை தீா்ப்பாயம் எடுத்து, இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

 எனவே, இழப்பீடு நிா்ணயம் செய்ததில் தவறு உள்ளது. அதனால், தீா்ப்பாய உத்தரவை ரத்து செய்கிறேன். ஒரு வாகனம் விற்பனை செய்யும்போது, அதை வாங்கும் நபருக்கு வாகன காப்பீடு குறித்து தெளிவாக எடுத்துச் சொல்வது இல்லை.

அதேநேரம், வாகனம் வாங்குவோரும், வாகன காப்பீடு குறித்து தெரிந்து கொள்வது இல்லை. இது வேதனைக்குரிய விஷயமாகும். அதுமட்டுல்ல, லட்சக்கணக்கில் செலவு செய்து வாகனங்களை வாங்குவோா், காப்பீட்டுக்காக ஒரு சிறு தொகையைச் செலுத்த ஏன் தயங்குகிறாா்கள்? வாகனத்துக்கு காப்பீடு செய்வதன் மூலம், அவா்களுக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் பாதுகாப்பு என்பதை ஏன் உணா்வது இல்லை? என்பது புரியவில்லை.

எனவே, வாகனத்தின் உரிமையாளா், ஓட்டுநா், பயணம் செய்யும் பயணிகள் மட்டுமல்லாமல், 3-ஆம் நபா் நலன் கருதி வரும் செப்.1-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு ‘பம்பா் டூ பம்பா்’ முறையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும். இந்த முறையை கட்டாயமாக்க வேண்டும்.  

இதுகுறித்து, வருகிற 30-ஆம் தேதிக்குள் தமிழக போக்குவரத்து கூடுதல் தலைமைச் செயலாளா் சுற்றறிக்கை அனுப்பி, இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். சுற்றறிக்கை பிறப்பித்தது குறித்து, அவா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com