பட்டாசு குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல்
சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்து அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஈசிஆர் கிராமத்தில் ஒரு பகுதியில் ஒரு பட்டாசு குடோனில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருத்தங்கள் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையில் நாகலாபுரம் ராமராஜ்(47) என்பவர் பட்டாசு கடைக்கு தேவையான பட்டாசுகளை வைக்க பயன்படுத்தப்பட்டு வந்த குடோனில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 மூட்டை புகையிலை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.17 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல் வைத்தனர். குடோன் உரிமையாளர் ராமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.